Wednesday, August 18, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்


அன்பு நண்பர்களே..

இன்று இந்த இடுகையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து இதை வெளியிடுகிறேன்..

தருமியின் பக்கத்தில் உள்ள இதை முழுமையாகப் படித்து விட்டேன்..

என் வீடு, என் சுகம், என் குடும்பம் என்று நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் சுயநலப் பேய்களாகிய இந்த நேரத்தில், தன் உயிருக்குப் பாதிப்பு வருமா, தன் குடும்பம் குட்டிகளின் எதிர்காலம் பாதிக்கப் படுமா என்று சிந்திக்காமல், நாடு தனக்கு என்ன செய்துள்ளது என்று யோசிக்காமல், தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து துணிந்து பணியாற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்த உமாசங்கர் அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. உங்களைப் போன்றோர் பலர் நம் தாய் நாட்டுக்குத் தேவை..

சும்மா ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைப் பாத்து விட்டாலே தப்பே செய்யாமல் இருந்தால் கூட தொடை நடுங்கும் நம் சமூகத்தில், உண்மையைத் தெள்ளத் தெளிவாக, மன தைரியத்துடன் எழுதியுள்ள உமாசங்கர் போன்றோர் தான் நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்..

அது இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.. ஆணிவேரை அசைத்துப் பார்க்கின்றனர்.. பிடுங்கவும் முயற்சிக்கின்றனர்.. ஆளுங்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்... எதிர்க்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்.. அதனால் தானோ என்னவோ ஊடங்களில் இந்த செய்தி அதிக அழுத்தத்துடன் வெளிவரவே இல்லை.. ஆம்.. தொலைத்தொடர்பு ஊடங்கள் எல்லாமே அரசியல் கட்சிகளின் கைப்பொம்மைகள் தானே.. ஆதாயத்துடன் இயங்கும் அவைகளிடம் ஞாயத்தை எதிர்பார்ப்பது நம் தவறு..

அதனால், எந்த வித ஆதாயமும் இன்றி, நல்ல விஷயங்களைப் பகிரும் இந்த வலை உலகில் உமஷங்கரின் மேல் எடுக்கப் படும் இந்தக் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க விழைகிறேன்...

வலை உலகம் ஒரு மாபெரும் சக்தி.. நேரடியாக நாம் அரசிடம் கோரிக்கை வைக்காவிட்டாலும், நம்முடைய இந்த ஒற்றுமை அவர்களை இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் என்றே நம்புகிறேன்...

உமாசங்கர் அவர்களுக்கு ஆதரவாக பல பேர் இருக்கின்றனர் என்பதை இதன் மூலம் நாம் ஊடகத்திற்கு உணர்த்துவோம்.. அவர் மீண்டும் பதவியேற்று ஊழல் பேர்வழிகள் அனைவரையும் தோலுரிக்க வேண்டும் என்பதே நல்லுள்ளங்களின் ஆசை..

மேலும் விவரங்கள் அறிய..

http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_18.html
http://pattapatti.blogspot.com/2010/08/blog-post_18.html

ஊர் கூடி தேர் இழுப்போம்... இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் காண்பிக்க நம் ஒற்றுமை இருக்கிறதல்லவா... வாருங்கள்..


பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி

Monday, August 16, 2010

கணக்கு சரியா....?

ஒரு நாள் சனிக்கிழமை ஒரு வேலையாக கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன்... வழியில் மத்தம்பாளையம் அருகே வெள்ளைச்சட்டை அணிந்த போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பணியை (?!?!?!?) செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.. அவர்களது வண்டியை தூரத்தில் பார்த்தவுடனேயே பல கில்லாடிகள் வண்டியைத் திருப்பிக் கொள்ளுவது வழக்கம். அதனை உணர்ந்ததாலோ என்னவோ, காவல் துறை மூளையைக் கசக்கி யோசித்து வண்டியை மறைவாக நிருத்தியிருந்தினர். அதுவும் அது ஒரு வளைந்த பாதை என்பதால், ஒரு முப்பதடி நெருங்கும்வரை அவர்கள் நிற்பதே தெரியாது(மாஸ்டர் பிளான்..!!!)

என் வண்டியைப் பார்த்து ஒரு பெண் போலீஸ், லட்டியை ஆட்டி ஓரமாக நிறுத்துமாறு சைகை காட்டியபடியே அடுத்த வண்டியை எதிர்பார்க்கலானார்.. ஒரு வண்டியையும் விட்டு விடக் கூடாது.. கடமையில் கொஞ்சம் கூட தவறாதவர்கள் அல்லவா..?

வண்டியை ஓரமாக ஒதுக்கிய இடத்தில் ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. பக்கத்தில் ஒரு ரோந்து வாகனத்தின் உள்ளில் விறைப்பாக ஒருவர் அமர்ந்து இருந்தார்.(கண்டிப்பாக பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும்..)

ஹெல்மேட்டைக் கழட்டியவாறே என்னுடைய அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன். வழியே செல்லும் நான்கு சக்கரவாகனங்களின் பின்னால் மறைந்து கொண்டே சில பேர் போலீசுக்கே தண்ணி காமித்துத் தப்பித்துப் போய்க் கொண்டு இருந்தனர்.. ஆனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க போலீஸ் முற்படவில்லை.. (ஒருவேளை வியாபாரம் கெட்டு விடும் என்ற எண்ணமோ..?)

என்னுடைய ஆவணங்களை அந்தப் போலீஸ் சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது, தலையில் கைக்குட்டை அணிந்த ஒரு பையன், ரோந்து வாகனத்தின் உள்ளிலிருந்த அந்த உயர் அதிகாரியிடம் ஏதோ கெஞ்சிக்கொண்டு இருந்தான்.. விளங்கி விட்டது.. எப்படியும் நல்ல காசு பார்த்து விடுவார்கள். கிடைக்கும் காசை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயத்திலும் கீழ்மட்டத் தொழிலாளர்கள் கண்டிப்பாக ஏமாற்றப் படுகிறார்கள். வெயிலில் நின்று கைகாட்டும் அந்தப் பெண் போலீசுக்கும், பரிசோதனை செய்யும் அந்த இன்னொரு போலீசுக்கும் கிடைக்கும் பங்கு மிகக் குறைவாகத் தான் இருக்கும், மற்றும் அந்த ரோந்து வாகன ஆசாமி தான் அதிக பட்ச பங்கை அனுபவிப்பார் என்பது எனது கற்பனை.. சரியா...?

என்னிடம் ஒன்றும் கறக்க முடியாது என்ற சோகத்துடன் என்னை விட்டு விட்டனர்.. ஒரு மணி நேர வேலைக்குப் பின் திரும்பி வந்து கொண்டிருந்தேன். திரும்பி அதே இடத்துக்கு வரும்போது, ஒரு பையன் வழியில் போகின்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான்.. அருகில் நெருங்கியபோது தெரிந்தது அது அந்த கப்பம் கட்டிய பையன் தான்.. இம்முறை தலையில் கைக்குட்டை இல்லை. வழியில் போக்குவரத்துக் காவலாளிகள் நிற்பதாகவும், போதிய ஆவணங்கள் இல்லை என்றால் திரும்பிச் சென்று விடுமாறும், இல்லை என்றால் அருகில் ஒரு குறுக்கு வழி இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருந்தான். அந்தப் பையன் அருகே இன்னும் சில இளைஞர்கள் திரு திருவென்று விழித்துக் கொண்டு இருக்க அது வழியில் போகும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவனைப் பார்த்தபடியே, கொஞ்ச தூரம் சென்றதும் கவனித்தேன். அவன் சொன்னது சரிதான். அதிகார்கள் இப்போது சாலையின் மறுபுறம் நின்று கொண்டு இருந்தனர்.

என்னை மறுபடியும் நிறுத்தினர். அதே காவலர் தான். நான் தெரிந்தவனைப் போல காட்டிக் கொண்டு புன்சிரிப்புடன் இப்போது தான் நான் இந்த வழியாகச் சென்றேன் என்று சொன்னேன். ஆனால் அவரோ என்னை இதற்கு முன் பாக்காதவர் போல் நடந்து கொண்டார். மறுபடியும் சோதனைகளை முடித்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த சம்பவத்திலிருந்து எனக்குள் கீழ்க்காணும் சிந்தனைகள் தோன்றுகின்றன.

1. போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டி அமர்த்தப் பட்ட இவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் காசு பார்க்கின்றனர். சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இது எச்சரிக்கை இது என்பதால் இது சரியா..?

2. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை எச்சரித்த அந்தப் பையன் செய்தது சரியா...?

3. லஞ்சம் பெறுவதால் இவர்கள்(காவலர்கள்) செய்வது தவறா...?

4. லஞ்சம் கொடுத்ததால் அந்தப் பையன் செய்தது தவறா...?

போலீசார் செய்தது சரியென்றால் அந்தப் பையன் செய்ததும் சரிதான். போலீசார் செய்தது தவறென்றால் அந்தப் பையன் செய்தது தவறுதான்.

என்ன கணக்கு சரியா....?

கடைசியாக இன்னுமொரு சிந்தனை.. அந்தப் போலீசுகளும் எத்தனையோ கனவுகளோடும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் பணிக்கு வந்திருப்பார்கள் அல்லவா..?

இது போன்று என் அன்றாட வாழ்வில் நான் கடந்து செல்லும் அனைத்து விஷயங்களிலிருந்தும் என் மனது பல விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். அனால் அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது கடினம். இப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று..

நன்றி..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி