Thursday, October 28, 2010

நான் தீவிரவாதி..

சனிக்கிழமை ராத்திரி பத்தரை மணிக்கு தான் எனக்கு பிரான்க்புர்ட்டில் இருந்து இந்தியாவிற்கு விமானம்... காலை அதிவேக ரயிலில் ஏறி மதியம் பணிரண்டரை மணிக்கெல்லாம் விமான நிலையம் எட்டி விட்டேன்.. உடன் வந்தவர் மூன்று மணி விமானத்திற்காகச் சென்று விட, தனியாக பத்தரை மணி வரை அங்கேயே கழிக்க வேண்டிய கட்டாயம்.. கொஞ்சம் வெளியில் எங்கேயாவது உலவி விட்டு வரலாம் என்றால் முதுகில் ஒரு பை, கையில் அலுவலக மடிக்கணினி, அப்புறம் பெரிய மற்றும் சிறிய ட்ராலி பெட்டிகள். அவைகளைப் பாதுகாப்பு அறைக்குள் வைத்து விட்டுச் செல்வது உசிதமாகப் படவில்லை, மற்றும் வெளியில் சென்றால் சரியான சமயத்திற்குச் சென்று திரும்பி வர வேண்டும். கையில் வைத்திருக்கும் பர்ஸ், பாஸ்போர்ட் சகிதங்கள் தொலைந்தும் விடக் கூடாது. நண்பர்கள் நிறையக் கூறி இருந்ததால் மொழி தெரியாத ஊரில் விபரீத முயற்சி கூடாது என்று அங்கேயே உக்கார்ந்து விட்டேன்..


சும்மா உக்கார்ந்து அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. வருகின்ற போகின்ற போலீஸ்காரர்கள் எல்லாரும் ஒரு தீவிரவாதியைப் பாக்குற மாறியே பாத்துகிட்டு இருந்தாங்க.. பக்கத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணி வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.. பார்ப்பதற்கு இரண்டு பெரும் சேர்ந்து கள்ளக் கடத்தல் செய்வதுபோல் தோன்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. இரண்டு போலீசார் நேராக எங்களிடத்தில் வந்து எங்களிடம் பாஸ்போர்ட்டை கேட்டனர்.. எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.. அந்த ஆப்பிரிக்க பயணியும் சென்று விட இதே போல் மேலும் இரண்டு முறை தனித்தனி போலீஸ் குழுவினர் என்னுடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்து விட்டனர்.. ஏன் என்னை மற்றும் இப்படி சோதனை செய்கிறார்கள் என்று யோசித்தேன்..

கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடுதல், அருகில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசுதல், உலாவுதல் போன்ற ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் சும்மா உக்கார்ந்து இருந்தேன். சும்மா உக்கார்ந்தால் கண் சும்மா இருக்காது. சுற்றி முற்றி பராக் பார்த்துக் கொண்டிருக்கவும் தான் அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.

அப்புறம் என்ன..? நான் கையோடு கொண்டு சென்றிருந்த ராஜேஷ்குமார் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். கடிகாரம் உள்பட அனைத்தும் மெதுவாக நகர்வதாக உணர்ந்த நேரத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்தோடியது அவர் எழுத்து. எப்படியோ ஒரு நாவலைப் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.. அட, இந்த இடைவெளியில் குறைந்தது இருபது போலீசாராவது என்னைக் கடந்து சென்றிருப்பர்.. ஆனால் ஒருத்தர் கூட என்னைச் சோதிக்க வில்லை.

அடுத்த புத்தகத்தை எடுத்தேன். ராஜேஷ்குமார் எப்போதும் தன்னுடைய நாவலின் அத்தியாயங்களுக்கு இடையே நல்ல பல அறிவியல் தகவல்களைக் கொடுப்பார். உதாரணத்திற்கு எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன மருந்துகள், மற்றும் ஸ்டெம் செல்களினால் ஏற்படும் பலன்கள் என்னென்ன போன்றவை. என்னுடைய இரண்டாவது புத்தகம் ஒரு ராணுவ சம்பந்தப் பட்ட கதை. அதனால் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்தின் போதும் ஒரு வித்தியாசமான துப்பாக்கி வகையின் படத்தைப் போட்டு அதன் விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.. ரத்த ஓட்டத்தைப் போன்ற விறுவிறுப்பான கதை.

பாதி படித்து முடித்திருந்த போது பின்பக்கம் யாரோ நிற்பதை உணர்ந்தேன். திரும்பிப் பார்க்க இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. ஏன் என்னை இப்படிப் பார்க்கிறார்.. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் உணர்ந்தேன். எல்லாம் நாவல் பண்ணிய பிரச்சினை. அதிலிருந்த துப்பாக்கிப் படம் அவர் கவனத்தைத் திருப்பி இருக்க வேண்டும். கசகச போல சர்ச்சைக் குரிய பொருட்களைக் கொண்டு வந்து விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டு விளக்கவும் முடியாமல் தூதரக ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் வரிசையாக என் மனக்கண் முன்னால் வந்து சென்றனர்.

லேசாக சிரித்து விட்டு, மேலும் இரண்டு பக்கங்களைப் புரட்டினேன்.. என் கேட்ட நேரம் மறுபடியும் அடுத்த பெரிய ராக்கெட் லாஞ்சர் வகை துப்பாக்கியின் படம் போட்டு வருணிக்கப் பட்டு இருந்தது. அப்படியே லேசாக மூடி அட்டைப் பக்கம் தெரியுமாறு கையில் வைத்துக் கொண்டேன். அதில் "கிரைம்" மற்றும் "ராஜேஷ்குமார்" என்று கோட்டை எழுத்தில் எழுதி இருந்தது. ஆனால் தமிழில்..

தம்பி சாமக்கோடங்கி.. ஏதோ உனக்கு நல்ல நேரம்.. அவர் அப்படியே நகர்ந்து சென்று விட்டார். அப்புறம் என்ன.. அங்கே உக்காரவே இல்லை. "பொன்னை விரும்பும் பூமியிலே.. என்னை விரும்பும் ஓருயிரே.." பாடல் ஸ்டைலில் என்னுடைய உடமைகள் அனைத்தையும் ஒரு சக்கர வண்டியில் (உபயம்: பிரான்க்புர்ட் விமான நிலையம்) வைத்து உருட்டிக் கொண்டே அங்கே சுற்றி வர ஆரம்பித்தேன். ஏழு மணி அளவில் செக்-இன் கவுண்டர் திறக்கப்படவும் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்(முகத்தை வைத்து தமிழ்நாட்டுக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்றொரு ஊகம்). சுற்றி வருகையில் மறுபடியும் அவர் கண்ணுக்குப் பட கேட்டே விட்டேன். அவர் கோயம்புத்தூர்காரர் என்று தெரிந்ததும் என்ன ஒரு குதூகலம்... அப்புறம் என்ன.. நேரம் போனதே தெரியவில்லை.


பி.கு :

1.மொழி தெரியாத இடங்களில் நமக்கு முன் அனுபவம் இல்லாத சமயங்களில் சற்று அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நலம். குறிப்பாக விமான நிலையங்களில்.

2.ப்ரான்க்புர்ட் மற்றும் துபாய் விமான நிலையங்களில் சட்டை, பேன்ட்டைத் தவிர காலணி உட்பட அனைத்தையும் கழற்றிச் சோதனை போட்டனர். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தில் கைப்பைகள் மட்டுமே சோதனை செய்யப் பட்டன. கோட்டுகள் மேலங்கிகள் எதுவும் சோதனை செய்யப் படவில்லை. எனக்கு முன்னால் ஒரு பத்து பேர் நிற்கும்போது அந்த ஸ்கேன் சோதனைக்கருவி செயல்படாமல் போனது. இரண்டு சோதனை அதிகாரிகளில் ஒருவர் வாக்கி டாக்கியுடன் வெளியில் பேசிக்கொண்டே அவசரமாகச் சென்றார். இன்னொருவர் அந்தக் கருவி சரியாகும்வரை எங்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் உக்கார்ந்தே இருந்தார். அனைவரும் சோதனை செய்யப்பாடாமலேயே பெங்களுருவிற்குள் அனுமதிக்கப்பட்டோம்.

3.கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி: நீங்கள் ஓடும்போது கோபப் படுகிறீர்களா...? வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்குங்கள்.. நடக்கும்போது கோபப் படுகிறீர்களா..? வேகத்தைக் குறைத்து உக்கார்ந்து விடுங்கள்.. உக்கார்ந்து இருக்கும்போது கோபப் படுகிறீர்களா...? படுத்து ஓய்வெடுங்கள்.. (அதாவது கோபம் வரும்போது நிதானியுங்கள்).

ஓய்வெடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..

நன்றி
சாமக்கோடங்கி

Tuesday, October 26, 2010

ஏதாவது செய்யுங்க.............

விமானத்தில் ஏறியதும் தரைப்பகுதியைக் காண்பிக்கும் காமிராவை என்னுடைய டிவி திரையில் போட்டுக் கொண்டேன்.. விமானம் பறக்கத் துடங்கியது.. என் நாட்டுக்குத் திரும்பும் சந்தோஷம் மனதில். "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.." என்ற பாடலை முனகிக் கொண்டே வந்தேன்.. சும்மா இருந்ததால், மனது பல விஷயங்களை அசை போடத் துவங்கி இருந்தது.

"உங்கள் நாட்டைப் போல வேகமாக எங்கள் நாட்டு ரோடுகளில் வண்டி ஓட்ட முடியாது.. எங்கள் நாட்டின் ரோடுகள் அப்படி..குண்டும் குழியுமாக இருக்கும்.. எங்கள் ஊரில் மாசுக்கள் அதிகம். அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்குவார்கள்.." இதைப் பெருமையாக வெள்ளைக் காரனிடம் சொல்லி தானே பெக்க பெக்க வென்று சிரித்துக் கொண்டு அவர்களையும் வேண்டா வெறுப்பாகச் சிரிக்க வைத்த என்னுடைய உடன் பணிபுரிபவர் நினைவுக்கு வந்தார்..

உங்கள் நாட்டைப் பற்றி நீங்கள் வேறொரு நாட்டினரிடம் சிரிப்பை வரவழைப்பதற்காகக் கூட தவறாகப் பேசுவீர்களா..? ஆனால் ஜெர்மனி நண்பர்கள் இவரைப் பேச வைத்து வேடிக்கை பார்க்கவில்லை(அது அவர்களை எவ்வளவு கூச வைத்திருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்).. "எங்கள் நாட்டில் பல நல்ல கலாச்சாரமும் காலம் காலமாக இருந்து வருகிறது.." என்று கொஞ்சம் நான் ஒப்பேத்த நினைத்தாலும் இவர் விடுவதாயில்லை.. உள்ளே புகுந்து வார்த்தைக்கு வார்த்தை "In india...." என்று ஆரம்பித்து கேவலப்படுத்தத் தொடங்கி விடுவார்..

அப்போது தான் புரிந்தது.. வெள்ளையர்கள் முதலில் நமது செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். போகையில் பிரிவினை ஏற்படுத்தி விட்டுப் போயினர் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன்.. ஆனால் நமது தன்மானத்தையும் ரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து விட்டுப் போயிருக்கின்றனர் என்பது அப்போது தான் புரிந்தது..

உடன் பணிபுரிகிறார் என்கிற காரணத்திற்காக இவரை விட வில்லை.. சுமூக உறவை வளர்க்க வேண்டுமே என்பதற்காக இவரை சும்மா விட வில்லை..பிறகு ஏன் விட்டேன் என்று கேட்கிறீர்களா..?? ஏனெனில் தவறின் மூலம் இவரல்ல.. நமது தாய் நாட்டிலேயே பிறந்து, நமது தாய் நாட்டிலேயே வளர்ந்து ஆளாகி, நம் நாட்டின் செல்வத்தையே அனுபவித்து, இன்று வெளிநாடு செல்லும் அளவுக்கு பெரிய ஆளாகி வளர்ந்து கடைசியில் யாரோ ஒருவனிடம் நமது தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேச அந்த நாக்கு முன் வந்ததற்கு யார் காரணம்...?? இந்த சாக்கடை எப்போது நமது ரத்தத்தில் கலந்தது..??

கறந்த பால் மடி புகாது, கொட்டிய சொல்லை அள்ள முடியாது என்று தெரியாதா..???

"சிறு வயதிலிருந்தே நமது நாட்டில் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவில் ஒன்றும் இல்லை. எந்த விஷயத்திலும் வெளிநாட்டினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் நமது நாடு எப்போதும் இருந்ததில்லை. நமது நாட்டில் லஞ்ச லாவண்யம் தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை, நமது நாடு உருப்படப் போவதும் இல்லை" என்கிற எண்ணம் இன்று இருக்கும் இந்தியர் மட்டும் இல்லாமல் இனி பிறக்கப் போகும் ஒவ்வொரு பிஞ்சுகளின் மத்தியிலும் "தானாக" பதியப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது..

இந்தியாவில் தொழிலை எப்படித் துவங்கலாம் என்று "தொழில் நுட்ப" நுணுக்கத்துடன் ஜெர்மானிய நண்பர்கள் கேட்டவுடன் ..."எங்கள் அரசியல் வாதிகளுக்கு தள்ளுவதைத் தள்ளினால் போதும்.. எப்படியும் துவங்கி விடலாம்.." என்று உச்சகட்டமாகச் சொல்லிச் சிரித்தபோது, எனக்குள் பிறந்த கெட்ட வார்த்தைகளை நான் சொன்னால் பிளாக் உலகில் என் பேர் கெட்டு விடும்.

யாரை நினைத்துக் கோவப்பட..?? எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் என்று நாட்டைச் சுரண்டி இந்தப் பிச்சைக் கார நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கும் இந்த அரசியல் பெருச்சாளிகளைக் கொடும்பாவிகள் என்று வருணித்தால், பிறந்த பொன்னாட்டை வெளிநாட்டவரிடம் கேலிக்கூத்தாக்கும் இவர்களை என்னவென்று வருணிக்க...??

இவர் மட்டுமல்ல நண்பர்களே.. இவரைப் போல இன்னும் பல பேர் நம்மில் உள்ளனர்.. நீங்கள் வெளிநாட்டில் இருப்பின் நீங்களும் இது போன்றவர்களுடன் பழகும் சந்தர்பம் கிட்டி இருக்கலாம்.. இவர்கள் சொந்த வீட்டில் தேவையில்லாத ஒரு ஆணியைப் பிடுங்கக் கூட வக்கில்லாதவர்கள்.. @$%@^^#%&%#!@#$@! (மன்னிக்கவும் நண்பர்களே.. என் மனது சரியில்லை)

சுத்தமான தெருக்கள், பேருந்து வசதிகள், ரயில் நிலையங்கள்,ட்ராம் வண்டிகள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள், எங்கே பார்த்தாலும் ஒழுக்கம், அருமையான உள்கட்டமைப்பு, நன்கு படித்த மக்கள்,இத்தனையும் இருந்த நாட்டில் ஒரு நாட்டில் இருந்து இப்போது பறந்து கொண்டிருக்கிறேன்..

இதோ கடலைத் தாண்டி தரை தெரிகிறது.. பாவப்பட்ட, ஏமாற்றப்பட்ட, சீரழிக்கப்பட்ட, இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு அடிமையாய் இருக்கப் போகிற,என் தாய் தேசம் வந்து விட்டது..

எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மிடத்தில் மனித சக்தி இருக்கிறது.. வளமும் இருக்கிறது.(மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது..). வெளிநாட்டவரை விட வேகமாக முன்னுக்கு வரக்கூடிய உத்வேகம் இருக்கிறது... ஆனாலும்..?!?!?

அரசியல் வாதிகளே.. பலவேறு மூட நம்பிக்கைகளை வைத்து ஓட்டு வேட்டை நடத்தி "அரசியல்" செய்யும் தலைவர்களே.. மக்களை மடையர்களாக மூளைகளை மழுங்கடித்து வைத்திருக்கும் மாமனிதர்களே..
உங்களைப் பார்த்து ஒன்றே ஒன்றை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..
நமது ரத்தத்தில் ஊறியுள்ள இந்த சாக்கடை உணர்வுகளை நீக்க உங்களால் மட்டுமே முடியும்.. நமது தேசத்தைத் தலை நிமிர வைத்து செழுமையாக்க உங்களால் மட்டுமே முடியும்.. பட்டாபட்டி ஒரு நாள் தொலைபேசியில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது.. "நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்" என்று..


ஆனால் இங்கே









என் நாட்டின் மானம் இன்னொரு நாட்டின் முன் மண்டியிடுவதைக் காண மனம் சகியவில்லை..

உங்களிடம் பிச்சையாகவே கேட்கிறேன்..

"ஏதாவது உருப்படியாச் செய்யுங்கள் அய்யா...."


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.



இப்படிக்கு
சாமக்கோடங்கி..