
சுற்றுலா என்றாலே சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற கனவுப் பிரதேசங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெரும்பங்கு நம் திரைத்துறையினருக்கு உண்டு. ஆனா நமக்கு அவ்வளவு தூரம் போக எல்லாம் வசதிப் படாது. பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் சுற்றுலா என்பதை வெறும் வார்த்தையளவிலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மையைச் சொன்னா இப்ப ஒரு ரெண்டு வருஷ காலமாத்தான் வெளிய சுத்த ஆரம்பிச்சிருக்கேன். சும்மா ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் தான் எங்கேயாவது போவோம்.

அப்போது தான் தெரிய வந்துச்சு நம்ம ஊரைச் சுற்றி எத்தனை நல்ல அருமையான இடங்கள் இருக்குன்னு. இது ஒண்ணும் பெரிய பயணக் கட்டுரை இல்லை. நான் பார்த்த (அனேகமா எல்லாரும் பாத்து இருப்பாங்க..)இடங்களைப் பற்றியும் சில நல்ல அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதன் மூலமா இந்தப் பகுதிக்கு ஏற்கனவே யாராவது போய் இருந்தால் அவங்களுடைய அன்பவங்களையும் எல்லாரும் கேக்கலாம்..

சிறுவயதில் இதுபோன்ற பகுதிகளுக்கு செல்லாததனால் தான் என்னவோ இங்கே எல்லாம் செல்வதற்கு எனக்கு கொள்ளை இஷ்டம். கம்பெனியில் அவுட்டிங் செல்ல உத்தேசிக்கும் போதெல்லாம் இடத்தேர்வுக் குழுவில் நான் ஒட்டிக் கொள்வேன். இதன் மூலம் இரண்டு நன்மைகள். ஒன்று அந்த இடத்தை கூட்டம் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பேருடன் ரசிக்கலாம். இரண்டு அந்த இடத்தை இரு முறை பார்க்கும் போது மற்றவர்களை விட நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.(முதல்ல போகும்போது ஆகும் என்னுடைய செலவு, என்னுடைய கையிலிருந்துதான்..)

ஊட்டி எனக்கு மிக அருகில் இருப்பதால் தானோ என்னவோ அங்கே நான் அதிகம் சென்றதே இல்லை. ஆனால் சுற்றுலா பற்றிய நல்ல பிளாகுகளைப் படித்த பின்னர் தான் அதன் பெருமையை புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பெருவாரியான சுற்றுலாத் தளங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி..

அலுவலக சுற்றுலாவுக்காக நாங்கள் பார்த்த இடங்களில் முக்கியமானது "நெல்லியம்பதி". எங்கள் மாமா வீட்டிலிருந்து வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான்.. அனாலும் இந்தப் பெயர் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எனக்குத் தெரியும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள் என்று தேடியபோது எனக்குச் சிக்கியது இந்தப் பெயர். மற்றபடி அந்தப் பகுதியைப் பற்றி கூகிளில் எனக்குச் சரியான தகவல்க கிடைக்கவில்லை.

கடைசியில் தமிழ் வலைப்பக்கங்களில் தேடியபோது, வண்ணப் படங்களுடன் பலர் அவர்களின் நெல்லியம்பதி அனுபவங்களைப் பகிர்ந்து இருந்தனர்.(தமிழ் வலை நண்பர்களுக்கு நன்றி..). தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு நானும் என் நண்பர் முல்லைவாணன் என்பவரும் சேர்ந்து ஒரே பைக்கில் புறப்பட்டோம்...[படங்களில் கருப்பு பனியனில் இருப்பவர் என் நண்பர் முல்லை.. நீல நிற உடையில் நான்]

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அன்று நான் வண்டி ஒட்டிய மொத்த தூரம் முன்னூறு கிலோ மீட்டர் (மேட்டுப்பாளையம் டு நெல்லியம்பதி போக வர).நான் அறுபத்தைந்து கிலோ, என் நண்பர் குறைந்த பட்சம் எழுபத்தைந்து கிலோ இருப்பார். அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாததினால் நானே மொத்த தூரத்தையும் ஓட்டினேன். வண்டி என்ன தெரியுமா..? ஸ்டார் சிட்டி 100CC.(?!?!)
[ஊட்டி சென்றிருந்த போது என் வண்டி இரண்டு பேரை மலை மேல் இழுக்காது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தனர்.. நெல்லியம்பதி மலை ஏறிவிட்டு வந்து எல்லோரிடமும் காலரைத் தூக்கி விட்டுக் காட்டியது ஒரு இனிய அனுபவம்]
மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு போகும் வழியில் துடியலூரில் முல்லைவாணனைக் கூட்டிக் கொண்டு எட்டு மணிக்குள் ஆத்துப் பாலத்தைக் கடந்து விட வேண்டும் என்பது தான் திட்டம். அனால் சாப்பாடு முடிந்து சாவகாசமாக வாளையார் பகுதியைக் கடக்கும் போது மணி ஒன்பது. கேரளாவிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை காற்றும் காட்சிகளும் கண் கூடாக உணர்த்தின. முதலில் எங்களை வரவேற்றவர் ஏர்டெல் என்ற நண்பர். பாலக்காட்டிலிருந்து கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நெம்மாரா செல்லும் சாலைக்குள் புகுந்தோம். வண்டி ஓட்டும் களைப்பே தெரியாதவாறு இயற்கைக் காட்சிகள், இரண்டு புறங்களிலும் நெல் வயல்கள், வளைந்து வளைந்து செல்லும் நேர்த்தியான சாலைகள் என கண்களுக்கு ஒரே விருந்து தான்.
சத்தியமாகச் சொல்கிறேன்.. ஒரு சில விஷயங்களில் பைக்கு தான் பெஸ்ட்டு.!!! மத்ததெல்லாம் வேஸ்டு.!!!
குறைந்தது ஒரு பத்து இடங்களிலாவது நிறுத்தி விலாசம் விசாரித்திருப்போம்.நெம்மாரா அருகே ஒரு கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று நிறுத்தினோம். கடையில் பெப்சி, கோக்,மிரிண்டா,பாண்டா எதுவும் இல்லை. வெகு தூரம் சாயாக் கடையைத் தேடி அலுத்து விட்டதனால் எது கிடைத்தாலும் குடிக்கலாம் என்ற முடிவில் தான் அங்கு நிறுத்தினோம். என்ன அதிசயம்.!!?! கோல்டுஸ்பாட், காளிமார்க் போன்ற பிராண்டு குளிர்பான பாட்டில்கள் அங்கே இருந்தன.!!

இவை எல்லாம் என்னுடைய பள்ளிக் காலங்களோடு வழக்கொழிந்து விட்டன என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் புரிந்தது உள்ளே இருந்த பானம் உள்ளூர்த்தயாரிப்பு என்பது. நண்பர் வேக வேகமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டார். சீரகத் தண்ணீர் தான்.. உடம்புக்கு நல்லது என்றார். எனக்கு என்னவோ அதில் சீரகத்தோடு கள் வாடை கொஞ்சம் வீசுவது போல் ஒரு சந்தேகம். கேட்டேன்.. இல்லை என்றார்கள்..இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்து விட்டேன்.
முதலில் எங்களை வரவேற்றது போத்தூண்டி டேம்(படம் 2 மற்றும் 3).. ஆள் அரவமே இல்லாத ஒரு டேம். தண்ணீர் பச்சை கலந்த நீல நிறத்துடன் அழகாகக் காட்சி அளித்தது. சிறு பூங்கா அமைத்திருந்தனர். உக்கார்ந்து இளைப்பாற நேரம் இல்லாத காரணத்தால் அங்கே விண் முட்டிக் காட்சி அளித்த நெல்லியம்பதி மலை மீது வண்டியை விட்டோம்..

சும்மா சொல்லக் கூடாது.. தண்ணீர்க் குடத்தில் துளை போட்ட மாதிரி அங்கங்கே பொத்துக் கொண்டு ஓடும் சிறு சிறு அருவிகள் நீர்வீழ்ச்சிகள் வழியெங்கும் வரவேற்றன. முதல் அருவியைப் பார்த்தவுடனேயே வண்டியை நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். [சில புகைப்படங்களை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்].அங்கே எங்களைப் போன்றே பைக்கில் வந்தவர்கள் சொன்னார்கள், இங்கே நிறைய நேரம் செலவிடாதீர்கள்.. இன்னும் நிறைய அருவிகள் மேலே செல்லச் செல்ல உள்ளன என்று.உண்மைதான்.
குளுகுளுவென சுத்தமான அருவி நீர் கடவுளின் வரம்.. இந்த மலைகளில் தான் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து உள்ளன என்று வியப்பிற்கு உள்ளானோம்..
பதிவு நீளமாகி விட்டதால் நெல்லியம்பதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..
==============================
வீட்டில் நகைச்சுவை:
"அம்மா சோறு... அம்மா சோறு..!!" என்று சொல்லிக் கொண்டே கம்ப்யுட்டரைத் தட்டிக் கொண்டு இருந்தேன். அதைக் கவனிக்காததால் என் அம்மா தட்டில் சொறோடு வந்து அருகில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். டிவியில் "என் தாய் எனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.." ராஜ்கிரண் பாடல் பாடிக் கொண்டு இருந்தது. "அம்மா சோறு கேட்டேனே எங்கே...?" என்று நான் சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்க்க என் அம்மா வாய் நிறைய சொற்றோடு திருதிருவென விழித்தார்... "தன் வயிறைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே.." என்ற வரிகள் சரியாக ஒலிக்க வீட்டில் ஒரே சிரிப்பு..
==============================