Showing posts with label புகைப்படம் பேசுது. Show all posts
Showing posts with label புகைப்படம் பேசுது. Show all posts

Sunday, December 12, 2010

நினைவுகள் - பகிர்வுகள்

வணக்கம் நண்பர்களே..

வாழ்க்கையில் நாம் கடந்து போகும் பல விஷயங்களில் நமக்குப் பிடிக்காதவை பல இருந்தாலும், ஒரு சில நல்ல விஷயங்கள் நம் மனதில் பதிந்து போகும். அது போன்ற சில விஷயங்களை இங்கே என் நினைவுகளாகப் பதிய நினைக்கிறேன். பதிந்தவற்றை உங்களோடு பகிரவும் நினைக்கிறேன்.

நான் பள்ளியில் படித்த காலங்களில் எங்களுக்கு ஏட்டுக்கல்வியைத் தவிர வேறேதும் அளிக்கப் படவில்லை. புத்தகச்சுமை, காலையில் இருந்து மாலை வரை அடுக்கடுக்காக பாடங்கள், இறுகிப் போன முகங்களுடன் வாத்தியார்கள்(பாவம் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ..),உடற்பயிற்சி வகுப்பில் கூட விளையாட விடாமல் இரவல் வாங்கி பாடம் எடுக்கும் சின்சியர் சிகாமணிகள், சாயங்காலம் வீட்டுக்குப் போனால், விளையாடக் கூட முடியாத அளவுக்கு வீட்டுப் பாடங்கள், இவ்வளவு ஏன், கனவில் கூட அந்தக் குரூர முகங்கள், இது தான் என் பள்ளிக் கால நினைவுகள்.

வீட்டுப் பாடத்தை பாதி எழுதி விட்டு, தூக்கம் வந்தால், அம்மாவை அதிகாலையில் எழுப்புமாறு சொல்லி, அப்புறம் இது வொர்க் அவுட் ஆகாது என்று நடுராத்திரியே சாவி கொடுக்கப் பட்டவன் போல எழுந்திரித்து, அம்மாவையும் எழுப்பி உக்கார வைத்து, அழுகையும் கையுமாக வீட்டுப் பாடம் எழுதி முடித்த நாட்கள் மறக்க முடியாதவை. இவ்வளவு ஏன்.. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் கூட நண்பர்களுடன் கூடி விளையாட முடியாத அளவுக்கு, வினாத்தாளை விடையோடு எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று பணித்து விடுவர். முதல் ஐந்தாறு நாட்கள் நண்பர்களோடு விளையாடுவோம்.அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்று.அப்போதும் கூட, நான்கு நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்தால் சரியாக இருக்குமா, முடித்து விட முடியுமா.. கண்விழிக்க நேரிடுமா போன்ற கவலைகள் எங்களை ஆட்கொண்டு இருந்தன.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இப்படிக்கு இளங்கோ நடத்தும் விழுதுகள் நற்பண்புகள் கல்வி இயக்கத்தில் உள்ள மாணவர்கள் படிப்பைத் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றனர். நான் எப்போது அவர்களைச் சந்திக்கப் போகும் போதும் ஒவ்வொரு மாணவனும் வந்து "சார், அன்பே கடவுள் சார்" என்று சொல்லித் தான் வணக்கம் செய்வார்கள்.ஒவ்வொரு முறை அவர்கள் அதனை உச்ச்சரிக்கும்போதும் அவர்களுக்குள் அன்பு புகுத்தப் படுகிறது(அல்லது உள்ளிருக்கும் அன்பு பலப்படுத்தப் படுகிறது). ஆம்.. இன்றைய உலகுக்குத் தேவை.. அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.

அந்தக் குழந்தைகளின் பணிவு, பெரியோரிடம் காட்டும் மரியாதை, கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் காட்டும் ஆர்வம் எனப் பல விஷயங்கள் என்னை வியக்கச் செய்தன. நற்பண்புக் கல்வி என்பது எவ்வளவு தேவையான ஒன்று என்று அதை அனுபவிக்காத என்னைப் போன்றோருக்குத் தான் தெரியும். பள்ளிக் காலத்தை நினைவுக் கூறும்போது, அது பசுமையாகத் தெரிய வேண்டும். சாதனைகள் தெரியவேண்டும். எனக்குப் புத்தகங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.(ஆனாலும் ஆளாக்கி விட்டமைக்காக என்றும் என் மரியாதை மற்றும் நன்றிகள் அவர்களுக்கு உண்டு..)

அந்தக் குழந்தைகளுடன் பழகும்போது, என்னுடைய பள்ளிக் காலத்திற்குச் சென்று நான் அனுபவிக்காததை அனுபவிக்கும் உணர்வைப் பெறுகிறேன். அடிக்கடி செல்ல ஆசை, ஆனால் தொலைவும், நேரமும் தடையாக உள்ளன. சக்கரம் போல சுற்றிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில், அவர்களோடு இனைந்து நடத்தும் இது போன்ற நிகழ்வுகள் தான் என்னுடைய டைரியில் இடம்பிடிக்கும் தருணங்கள்.

இத்துடன் மரங்கள் நட்ட குழந்தைகளின் உற்சாக முகங்களை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் எதிர்காலத்தை இங்கே பாருங்கள்..

(செல்போனில் படம் பிடித்ததால் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கின்றன)












கடைசிப் படத்தில் இளங்கோ மற்றும் கமலக் கண்ணன்.

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

என்றென்றும் அன்புடன்,
சாமக்கோடங்கி

Friday, January 15, 2010

சூரிய கிரகணம் நேரடி படங்கள்..சுடச்சுட...

சுடச்சுட என்னோட கேமரால எடுத்ததுங்கோ
... Sony DSC - H50