
சும்மா உக்கார்ந்து அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. வருகின்ற போகின்ற போலீஸ்காரர்கள் எல்லாரும் ஒரு தீவிரவாதியைப் பாக்குற மாறியே பாத்துகிட்டு இருந்தாங்க.. பக்கத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணி வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.. பார்ப்பதற்கு இரண்டு பெரும் சேர்ந்து கள்ளக் கடத்தல் செய்வதுபோல் தோன்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. இரண்டு போலீசார் நேராக எங்களிடத்தில் வந்து எங்களிடம் பாஸ்போர்ட்டை கேட்டனர்.. எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.. அந்த ஆப்பிரிக்க பயணியும் சென்று விட இதே போல் மேலும் இரண்டு முறை தனித்தனி போலீஸ் குழுவினர் என்னுடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்து விட்டனர்.. ஏன் என்னை மற்றும் இப்படி சோதனை செய்கிறார்கள் என்று யோசித்தேன்..
கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடுதல், அருகில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசுதல், உலாவுதல் போன்ற ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் சும்மா உக்கார்ந்து இருந்தேன். சும்மா உக்கார்ந்தால் கண் சும்மா இருக்காது. சுற்றி முற்றி பராக் பார்த்துக் கொண்டிருக்கவும் தான் அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.
அப்புறம் என்ன..? நான் கையோடு கொண்டு சென்றிருந்த ராஜேஷ்குமார் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். கடிகாரம் உள்பட அனைத்தும் மெதுவாக நகர்வதாக உணர்ந்த நேரத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்தோடியது அவர் எழுத்து. எப்படியோ ஒரு நாவலைப் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.. அட, இந்த இடைவெளியில் குறைந்தது இருபது போலீசாராவது என்னைக் கடந்து சென்றிருப்பர்.. ஆனால் ஒருத்தர் கூட என்னைச் சோதிக்க வில்லை.
அடுத்த புத்தகத்தை எடுத்தேன். ராஜேஷ்குமார் எப்போதும் தன்னுடைய நாவலின் அத்தியாயங்களுக்கு இடையே நல்ல பல அறிவியல் தகவல்களைக் கொடுப்பார். உதாரணத்திற்கு எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன மருந்துகள், மற்றும் ஸ்டெம் செல்களினால் ஏற்படும் பலன்கள் என்னென்ன போன்றவை. என்னுடைய இரண்டாவது புத்தகம் ஒரு ராணுவ சம்பந்தப் பட்ட கதை. அதனால் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்தின் போதும் ஒரு வித்தியாசமான துப்பாக்கி வகையின் படத்தைப் போட்டு அதன் விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.. ரத்த ஓட்டத்தைப் போன்ற விறுவிறுப்பான கதை.
பாதி படித்து முடித்திருந்த போது பின்பக்கம் யாரோ நிற்பதை உணர்ந்தேன். திரும்பிப் பார்க்க இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. ஏன் என்னை இப்படிப் பார்க்கிறார்.. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் உணர்ந்தேன். எல்லாம் நாவல் பண்ணிய பிரச்சினை. அதிலிருந்த துப்பாக்கிப் படம் அவர் கவனத்தைத் திருப்பி இருக்க வேண்டும். கசகச போல சர்ச்சைக் குரிய பொருட்களைக் கொண்டு வந்து விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டு விளக்கவும் முடியாமல் தூதரக ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் வரிசையாக என் மனக்கண் முன்னால் வந்து சென்றனர்.
லேசாக சிரித்து விட்டு, மேலும் இரண்டு பக்கங்களைப் புரட்டினேன்.. என் கேட்ட நேரம் மறுபடியும் அடுத்த பெரிய ராக்கெட் லாஞ்சர் வகை துப்பாக்கியின் படம் போட்டு வருணிக்கப் பட்டு இருந்தது. அப்படியே லேசாக மூடி அட்டைப் பக்கம் தெரியுமாறு கையில் வைத்துக் கொண்டேன். அதில் "கிரைம்" மற்றும் "ராஜேஷ்குமார்" என்று கோட்டை எழுத்தில் எழுதி இருந்தது. ஆனால் தமிழில்..
தம்பி சாமக்கோடங்கி.. ஏதோ உனக்கு நல்ல நேரம்.. அவர் அப்படியே நகர்ந்து சென்று விட்டார். அப்புறம் என்ன.. அங்கே உக்காரவே இல்லை. "பொன்னை விரும்பும் பூமியிலே.. என்னை விரும்பும் ஓருயிரே.." பாடல் ஸ்டைலில் என்னுடைய உடமைகள் அனைத்தையும் ஒரு சக்கர வண்டியில் (உபயம்: பிரான்க்புர்ட் விமான நிலையம்) வைத்து உருட்டிக் கொண்டே அங்கே சுற்றி வர ஆரம்பித்தேன். ஏழு மணி அளவில் செக்-இன் கவுண்டர் திறக்கப்படவும் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்(முகத்தை வைத்து தமிழ்நாட்டுக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்றொரு ஊகம்). சுற்றி வருகையில் மறுபடியும் அவர் கண்ணுக்குப் பட கேட்டே விட்டேன். அவர் கோயம்புத்தூர்காரர் என்று தெரிந்ததும் என்ன ஒரு குதூகலம்... அப்புறம் என்ன.. நேரம் போனதே தெரியவில்லை.
பி.கு :
1.மொழி தெரியாத இடங்களில் நமக்கு முன் அனுபவம் இல்லாத சமயங்களில் சற்று அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நலம். குறிப்பாக விமான நிலையங்களில்.
2.ப்ரான்க்புர்ட் மற்றும் துபாய் விமான நிலையங்களில் சட்டை, பேன்ட்டைத் தவிர காலணி உட்பட அனைத்தையும் கழற்றிச் சோதனை போட்டனர். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தில் கைப்பைகள் மட்டுமே சோதனை செய்யப் பட்டன. கோட்டுகள் மேலங்கிகள் எதுவும் சோதனை செய்யப் படவில்லை. எனக்கு முன்னால் ஒரு பத்து பேர் நிற்கும்போது அந்த ஸ்கேன் சோதனைக்கருவி செயல்படாமல் போனது. இரண்டு சோதனை அதிகாரிகளில் ஒருவர் வாக்கி டாக்கியுடன் வெளியில் பேசிக்கொண்டே அவசரமாகச் சென்றார். இன்னொருவர் அந்தக் கருவி சரியாகும்வரை எங்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் உக்கார்ந்தே இருந்தார். அனைவரும் சோதனை செய்யப்பாடாமலேயே பெங்களுருவிற்குள் அனுமதிக்கப்பட்டோம்.
3.கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி: நீங்கள் ஓடும்போது கோபப் படுகிறீர்களா...? வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்குங்கள்.. நடக்கும்போது கோபப் படுகிறீர்களா..? வேகத்தைக் குறைத்து உக்கார்ந்து விடுங்கள்.. உக்கார்ந்து இருக்கும்போது கோபப் படுகிறீர்களா...? படுத்து ஓய்வெடுங்கள்.. (அதாவது கோபம் வரும்போது நிதானியுங்கள்).
ஓய்வெடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..
நன்றி சாமக்கோடங்கி |