என்னடா இது தமிழ்நாடு இப்படி இருக்கு.. எங்க பாத்தாலும் ரோடு சரியில்லை, அது இல்லை இது இல்லை என்று மனதுக்குள் எப்போதும் ஒரு புலம்பல் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமா, காலையில் கிளம்புவதில் இருந்து, மாலையில் வீடு திரும்பும் வரை பல நிகழ்ச்சிகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருப்பதில்லை.
வேலை விஷயமாக சென்ற வாரம் தியோகர் என்ற ஒரு மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். அது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. கொல்கத்தா வரை வான் வழியிலும், பிறகு அங்கிருந்து ரயிலிலும் தியோகரை சென்றடைந்தேன். ஒரு நாள் வேலை தான்.
ஹௌரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பிரச்சினையில் கொஞ்ச நேரம் தங்க வேண்டியதாயிற்று. சத்தியமாக மனம் நொந்து போனேன். எங்கு பார்த்தாலும் சிகப்பு சிகப்பாக எச்சில்(பாக்கு, பான் போடப்பட்டதால் சிவந்திருந்து). படித்தவன்(?!?!), படிக்காதவன், அவன் இவன் என்று சகலரும் கையில் புகையிலையை வைத்துக் கசக்கிக் கொண்டே இருந்தனர். தரையை உத்துப் பார்த்துக் கொண்டே நடந்தேன், மறந்தும் மிதித்து விடக் கூடாது என்று தான்.
புதிதாக பயணசீட்டு பதிவு செய்து இருப்பதாகவும், அருகில் ஏதேனும் இணையதளம் இருந்தால் நகலேடுத்துக் கொள்ளும்படியும் நண்பர் கூற, ரயில் நிலையம் முழுக்க அலைந்து தோற்றேன். வெளியில் நடக்க ஆரம்பித்தேன். எங்கும் பரவியிருந்த மூத்திர வாடை, மங்கிய ஒளியைப் படர விட்டிருந்த மஞ்சள் விளக்குகள், அழுக்கு ஆடைகளுடன் கூடிய மக்கள், பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகள், அதனருகிலேயே சுத்தமில்லாத முறையில் நடைபாதை உணவகங்கள், சராமாரியாக வண்டி ஓட்டும் மனிதர்கள் என்று எங்கு பார்த்தாலும் புன்னகைக்க முடியாத ஒரு சூழ்நிலை. அவ்வளவு பெரிய ஹௌராவில் ஒரு இணைய மையம் இல்லாமல் வெறும் கையோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். (என்னைப்போலவே ஒரு வெளிநாட்டுக் காரரும் இணைய மையத்திற்காக அலைந்து கொண்டு இருந்தார்).
ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நடைபாதை முழுக்க நடக்க முடியாதபடி குழந்தை குட்டிகள், பெட்டி படுக்கைகளுடன் மக்கள் படுத்து இருந்தனர். முழுமையாக ஏழ்மை வாசனையை இங்கு தான் நுகர்ந்தேன்.
பாட்னா செல்லும் ரயில் வந்ததாக அறிவிக்கப் பட்டதும், அரக்கப் பறக்க ரயிலின் மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் ஏற அவர்கள் அடித்துக் கொண்டது கண்ணில் இப்போதும் நிற்கிறது.
அடித்துப் பிடித்து தியோகர் வந்தடைந்தேன். காலையில் எழுந்ததும், நடைப்பயணம். அதே காட்சி, இன்னும் அழுக்காக. எங்கு பார்த்தாலும் சராமாரியாகத் துப்பும் மக்கள், எல்லோர் வாயிலும் சிவப்பு. எல்லா சுவர்களிலும் சிவப்பு, அழுக்கான வீடுகள், சாக்கடைகளை ஒட்டிய கூரைகள், அதிலும் கும்பலாக குடும்பங்கள். இன்னும் நிறைய.. ஒரே பதிவில் அடக்க முடியாது.
மாலையில் கொல்கத்தா திரும்ப வேண்டி ஜெசிடி ரயில் நிலையம் வந்தேன். உள்ளே நுழையவே முடியவில்லை. காலின் கட்டை விரல்களை மட்டுமே உபயோகித்து சாகச நடை நடந்தேன். ரயில் நிலைய மறக்கதவுகள் சிகப்புக் கரை படிந்து அழாத குறையாக நின்றன. அங்கேயும் மூட்டை முடிச்சுகளோடு ஏழை மக்கள். மூத்திர நாற்றம்.. ஐயோ சாமி, எப்படியாவது தமிழ்நாடு போய்ச் சேர்ந்து விடணும் என்று தோன்றியது.
என்னவொரு வாழ்க்கை, இந்த அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன..? எங்கிருந்து இத்தனை ஏழைகள்..? ஏன் இத்தனை வசதிக் குறைவுகள்..?
ஜோதிலிங்கத்தை தரிசிக்க வந்த இரண்டு தமிழ் யாத்திரிகர்களை அங்கே பார்த்தேன், அவர்கள் தமிழில் பேசியது காதில் விழவும், நானாகவே போய் அறிமுகப் படுத்திக் கொண்டு இவற்றைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தோம்.
அதில் ஒருவர் சொன்னார்.."நீங்கள் பரவாயில்லை, கம்பெனி காசு கொடுத்து விமானத்தில் அனுப்பி வைத்து இருக்கிறது.. நாங்கள் கையில் பத்தாயிரம் மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றி வருகிறோம். சிக்கனப் பயணம். இந்த மக்களோடு தான் கும்பலாக மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் இடுக்கிக் கொண்டு எங்கள் யாத்திரை. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான், ஏழைகளாக இருந்தாலும் நம் மக்கள் பெரும்பாலானோர் சுத்தமாகவும், பொது இடங்களில் குறைந்த பட்ச நாகரிகத்துடனாவது நடந்து கொள்வர். இயற்கையான நிம்மதியான வாழ்வாதாரங்கள், தமிழ்நாட்டில் ஒருங்கே அமைந்துள்ளன. எங்கே நமது அரசியல்வாதிகள் வடநாட்டைப் போல நமது நாட்டை ஆக்கி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது"
சத்தியமாக இப்போது நானும் சொல்கிறேன்.. தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான்.. திரும்பி வந்த பிறகு என்னுடைய சாலைகள் அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தியாவின் தென்பகுதி அழகுதான்.
ஏழைகளை இகழ்வாக நினைத்து சொல்லவில்லை.. நமது நாட்டின் சாபக்கேடினை புலம்பியிருக்கிறேன்.
இப்போது என் மனதில் தோன்றுவது..
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
தொடர்ந்து அலசுவோம்..
சாமக்கோடங்கி |