Sunday, July 18, 2010

இப்படியும் யோசிக்கலாமே...

வணக்கம் நண்பர்களே..

எனக்கே தெரியுது ஒரே மாதிரி பதிவுகள் எழுதினா செம போர் அடிக்குமுன்னு.. ஆனா என்னத்த செய்ய.. ஒரு சில விஷயங்கள் மனதில் தோன்றுகின்றன.. ஒரு சில எண்ணங்கள் கை நுனி வரை வந்து விடுகின்றன.. ஆனால் ஒரு சில விஷயங்களே என்னை எழுத வைக்கின்றன.. அதனால மன்னிச்சுக்குங்க மக்களே.. இதுவும் அதே ராகம் தான்..

நான் படித்ததில் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்த விஷயம். எழுதத் தூண்டிய விஷயம். டாக்டர் ஆர் ஏ மஷேல்கர் என்பவர் கூறியது. அதில் உள்ள விஷயங்களைப் படித்த பிறகு தான் தெரிந்தது மாமனிதர்கள் எல்லோரும் வருங்காலத்தை யூகிப்பதில்லை.. அவர்கள் தான் வருங்காலத்தை வகுக்கிறார்கள்.. உங்களில் பல பேர் அந்த pdf ஐப் படித்திருக்கலாம்.. "காந்தியன் இன்ஜினியரிங்"


அது என்ன..? காந்திக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்பந்தம்...? அந்தக் கொள்கை என்னவென்றால் "குறைந்த பட்ச உள்ளீடுகளின் மூலம் அதிக பட்ச பலன்களைப் பெற்று அதன் மூலம் அந்தப் பலனைப் பலபல பேர்களுக்குச் சென்றையச் செய்வது."

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்..தூக்கம் போக, துக்கம் போக, குழந்தைப் பருவம் போக, தள்ளாத வயது போக, ஒரு மனிதன் வாழ்வது அதிக பட்சம் இருபது வருடங்கள் இருக்கலாம்.. பூமி கொடுத்திருக்கும் அனைத்து வரங்களையும் அனுபவிக்கும் உரிமை அதில் அனைவருக்கும் உண்டு அல்லவா..? செவ்வாய் கிரகம் போய் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் வளர்ந்து விட்டான். அனால் அந்தத் தொழில்நுட்பத்தால் இன்று பசியால் வாடும் ஏழைக்கு என்ன பயன்..? அதனால் பயன்கள் இல்லாமல் இல்லை. அனால் நாட்டிற்கு இப்போதைக்கு தேவை அனைவருக்கும் பயன்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே..

காந்தி எளிமை வாழ்வு வாழச் சொன்னார்.. அதன் உள்ளர்த்தம் அனைத்தையும் தியாகம் செய்வதல்ல.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதே போல புதிய கண்டுபிடிப்புகளும் தொழில் நுட்பங்களும் அனைவருக்கும் பலனளிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். கைப்பேசி கண்டுபிடிக்கப் பட்ட பொது, அதை ஒரு சில செல்வந்தர்களால் மட்டுமே வாங்கி உபயோகிக்க முடிந்தது. அதன் மூலப் பொருட்களின் உண்மை விலை கைப்பேசியின் விலையை விடக் குறைவே.அனால் அந்தத் தொழில்நுட்பத்திற்கு தான் அந்த விலை."ஒரு தொலைபேசி அழைப்பானது ஒரு தபால் அட்டையின் கட்டணத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.." என்று திருபாய் அம்பானி சொன்னபோது அனைவரும் சிரித்தனர்.. அனால் இப்போதைய நிலைமையை கொஞ்சம் யோசியுங்கள்.. ஒரு சிறு பொறி எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது.. இன்று மூன்று வேலை அடுப்பு எரியாதவர் வீட்டிலும் கூட குறைந்த பட்சம் மூன்று கைப்பேசிகள் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விலைக் குறைப்பின் மூலம் இதனைத் தயாரித்தவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.. மாறாக பெரும் லாபமே. ஏனென்றால் உற்பத்தி அதிகரித்துள்ளதல்லவா...?

ஒரு காலத்தில் ஒரு அறையையே அடைத்தது போல் இருந்த கணினி இன்று நம் மடியில் உக்கார்ந்து கொள்ளும் அளவுக்கு சுருங்கி விட்டது ஆனால் அதனை விட பல மடங்கு வேகத்துடன்.. ஆனால் இதனால் பலன் அவ்வளவு இல்லை. நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால், ஐம்பதினாயிரம் மதிப்புள்ள கணினியை அதன் செயல்திறன் மாறாமல் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியுமா என்பது தான். ஏனெனில் அப்போதுதான் அது மேலும் பல லட்சம் பேரைச் சென்றடையும்.இது தான் காந்தியன் இன்ஜினியரிங்.


ரத்தன் டாடாவின் நானோவும் இந்த எண்ணத்தில் உதித்தது தான். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த விதி ஒத்து வராது. பூமி கொடுத்ததில் நமது வாழ்க்கைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அடுத்தவருக்கு வழி விடுவதே இதன் சாராம்சம். குறைவான விலையில் காரை வாங்குவதன் மூலம் நமது குறைந்த பட்ச கார் தேவையும் நிறைவடைகிறது. "இலவச சோலார் பேனலை கலைஞர் வழங்கினால்" என்று ஒரு பதிவு நான் எழுதி இருந்தேன். அது இப்போது ஞாபகம் வருகிறது.

சோலார் பேனல் இப்போது விலை ரொம்ப அதிகமே. அதையே குறைந்த விலையில் ஒருவர் தயாரிப்பாரானால், அது அனைவரும் வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். (ஒரு டிவியையே இலவசமாக வழங்குபவருக்கு இது சாத்தியமில்லையா என்ன...?)இதனால் அரசாங்கத்தின் மின்சார உற்பத்திப் பளுவும் குறையும்.மின்சாரத் தேவையில் நாமும் தன் நிறைவைப் பெற்று விடலாம்.

எனவே ஒரு தொழில்நுட்பமானது ஏழைகளுக்கும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.அனால் விலைக் குறைப்பினால் தரத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. தரம் தான் எப்போது தாரக மந்திரம். இரண்டு லட்சம் மதிப்புள்ள செயற்கைக் கால்கள் ஏழைக்கு எட்டாக் கனவே. எனவே விஞ்ஞானிகளே...அதே கால்களை இரண்டாயிரத்துக்கு தயாரிக்க முயற்சியுங்கள். ஒவ்வொரு ஏழைக்கும் அது பயன் தரும். ஒரு பொருளின் மதிப்பு, மனிதன் நிர்ணயித்ததே. தங்கம் என்பது மனிதனுக்கு மட்டுமே தங்கம். விலங்குகளுக்கு அது ஒரு கல்லைப் போன்ற பொருளே. மனிதனின் ஆசையால் இப்போது தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனி. அந்த நிலை இனி நீடிக்கக் கூடாது.

அரசு நினைத்தால் எந்த ஒரு பொருளையும் குறைந்த விலைக்குக் கொண்டு வர முடியும்.இதனால் பலன் அத்துனை கோடி மக்களுக்கும் சென்றடையும்.(அது தான் அரசின் கடமையும் கூட).

இளம் பொறியாளர் ஆஷிஷ் கவ்டே(Ashish Gawde)சொல்கிறார்.பன்னாட்டு நிறுவனங்களில் பணம் சம்பாதித்தது போதும். ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று. அவரது குறிக்கோள் இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களின் உள்ளிலும் வெளிச்சம் கொண்டு வர வேண்டுமென்று. அல்ட்ரா கபாசிடர் ஒன்றை மிதிவண்டியில் இணைத்து அதன் மூலம் எல்ஈடி விளக்கை எரியவைக்கும் சாதனத்தை அவர் தயாரித்துள்ளார். நான்கு நிமிடம் மிதிவண்டிச் சக்கரத்தைச் சுற்ற வைப்பதன் மூலம் நான்கு மணி நேரம் வெளிச்சம் பெற முடியும். என்ன ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. ஆனால் அல்ட்ரா கபாசிடர் விலை ரொம்ப அதிகம். அரசு முன்வந்து இது போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அதன் மூலம் இந்தியாவின் முதுகெலும்பை நிமிர்த்த வேண்டும். இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற விஞ்ஞானிகள் வளர்க்கப் பட வேண்டும்.

எனவே எதிர்கால இளைஞர்கள் விஞ்ஞானிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் தொழில்நுட்பங்களைப் படைக்க வேண்டும்.ஏனென்றால் பூமி கொடுத்த கொடை அனைவருக்கும் சொந்தம்..

அடுத்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன்.

நன்றி..

16 பின்னூட்டம்:

சாமக்கோடங்கி said...

நான் தான் முதல்ல பின்னூட்டம் போடுறேன்.(யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறேன்). "Gandhian Engineering" ஐ நிறைய பேர் படித்திருக்கலாம். ஆனாலும் பகிரனும்னு தோனுச்சு.

அடுத்த பதிவுல சிறு சிறு புதிர்கள் போடலாமுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். சாமக்கோடங்கியின் ப்ளாக் வரலாற்றில் முதல் முறையாக அப்படின்னு கூட விளம்பரம் போடலாம்னு இருக்கேன்.

என்ன ரம்பம் போட்டாலும் சலிக்காமல் வந்து படித்து விட்டு(?!?!) போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..

ஜெய்லானி said...

தலைவா நீங்க எதை போட்டாலும் படிப்போம்ல

Anonymous said...

விஜய் தொலை காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்சிகளையும் உடனுக்குடன் www.ttvplus.com இணைய தளத்தின் வாயிலாக பார்வையிட முடியும்.

Paleo God said...

//சோலார் பேனல் இப்போது விலை ரொம்ப அதிகமே. அதையே குறைந்த விலையில் ஒருவர் தயாரிப்பாரானால், அது அனைவரும் வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். (ஒரு டிவியையே இலவசமாக வழங்குபவருக்கு இது சாத்தியமில்லையா என்ன...?)இதனால் அரசாங்கத்தின் மின்சார உற்பத்திப் பளுவும் குறையும்.மின்சாரத் தேவையில் நாமும் தன் நிறைவைப் பெற்று விடலாம்.//

நீண்ட நாளாக மனதை அரிக்கும் விஷயம் இது!!! அதிலும் தமிழ் நாட்டில் சூரிய சக்தி அதிகமாய் கிடைக்கிறது. ஹும்ம் வேறு வழியில்லாது சோலார் பேனல் கூப்பாடு விரைவில் வரும்.

நல்ல பகிர்வு பிரகாஷ். தொடருங்கள்...

நாடோடி said...

இல‌வ‌ச‌ம் என்று சொல்வ‌தே யாரையும் யோசிக்க‌ விட‌ கூடாது என்ப‌து தான்.. ந‌ல்ல‌ ப‌திவு...பிர‌காஷ்

மதன் said...

எப்படியும் வாழலாம்ங்கற மனோபாவம் தான் இப்ப அதிகமா இருக்கு, நியாப்படி பாத்தா செத்ததுக்கு அப்புறம் ஒண்ணும் அள்ளிக்கிட்டு போக மாட்டோம்னு தெரிஞ்சும் நாம சொத்து சேக்கறோம் என்ன தான் நாம தன்னலம் இல்லாம இருக்க முயற்சித்தாலும் மனசுல ஒரு சுயநலம் இருந்திக்கிட்டே தான் இருக்கும்(அதுக்கு காரணம் நம்ப ஜீனோ... எனக்கு தெரியல) காந்தி மாதிரி இல்ல வாரண் மாதிரி போதும் எளிமையா வாழலாம்னு நினச்சா ஏழ பணக்காரங்கர வித்தியாசம் இருக்காது, ஆனா அந்த மனமாற்றம் வரது ரொம்ப ரொம்ப கஸ்டம் என்னையும் உட்படுத்தி, இருந்தாலும் என்ன கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க, நல்ல பதிவு, புதிருக்கு காத்திருக்கோம்...

இளங்கோ said...

// அரசு நினைத்தால் எந்த ஒரு பொருளையும் குறைந்த விலைக்குக் கொண்டு வர முடியும்.இதனால் பலன் அத்துனை கோடி மக்களுக்கும் சென்றடையும்.(அது தான் அரசின் கடமையும் கூட). //
Unmai prakash...

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

தலைவா நீங்க எதை போட்டாலும் படிப்போம்ல
//

எதை எழுதினாலும் படிக்கும் தானைத் தலைவன் ஜெய்லானி வாழ்க..

சாமக்கோடங்கி said...

//kadakam said...

விஜய் தொலை காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்சிகளையும் உடனுக்குடன் www.ttvplus.com இணைய தளத்தின் வாயிலாக பார்வையிட முடியும்.
//

எனது ப்ளாகை மதித்து வந்து விளம்பரம் செய்யும் கடகம் வாழ்க..

சாமக்கோடங்கி said...

//நீண்ட நாளாக மனதை அரிக்கும் விஷயம் இது!!! அதிலும் தமிழ் நாட்டில் சூரிய சக்தி அதிகமாய் கிடைக்கிறது. ஹும்ம் வேறு வழியில்லாது சோலார் பேனல் கூப்பாடு விரைவில் வரும். //

இன்று இது ஒரு ஆப்ஷன்.. நாளை இதுவே ஒரு கட்டாயம். அரசு உணரும்.

சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

இல‌வ‌ச‌ம் என்று சொல்வ‌தே யாரையும் யோசிக்க‌ விட‌ கூடாது என்ப‌து தான்.. ந‌ல்ல‌ ப‌திவு...பிர‌காஷ்
//

ரொம்ப நாளைக்கு ரொம்ப பேரை முட்டாளாகவே வைக்க முடியாது. நன்றி நாடோடி அவர்களே..

என்னை என்றென்றும் ஊக்குவிக்கும் எங்கள் அண்ணன் ஷங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல..

சாமக்கோடங்கி said...

//ஆனா அந்த மனமாற்றம் வரது ரொம்ப ரொம்ப கஸ்டம் என்னையும் உட்படுத்தி, இருந்தாலும் என்ன கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க, நல்ல பதிவு, புதிருக்கு காத்திருக்கோம்...//

இந்த வரிகளைக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. ஆடம்பரமும், வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் நமது சிறு வயதிலிருந்தே விதைக்கப் படுகின்றன.. நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன், வெளிநாட்டுக் காரர்கள் அறிவைப் பெருக்க வேண்டும் என்பதற்காகப் படிக்கிறார்கள்..(ஐம்பது அறுபது வயதிலும் கூட கல்லூரியில் தொலைதூரக் கல்வி பயில்கிறார்கள்).நமது மக்கள் பிறந்தது முதலே நல்ல வேலைக்குப் பொய் கொழுத்த காசு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனே வளர்க்கப் படுகின்றனர்..

படிப்பு அறிவைப் பேருக்கும் சாதனமாகப் பயன்படுத்தப் படும்போது அது செய்யும் மாயாஜாலங்கள் பல. நம் நாட்டில் ஆன்மிகம், சேவை போன்றவை வெகுபலரிடம் காணப படாதமைக்கு இதுவே காரணம். நிம்மதியும் கடைசி வரை கிடைக்காது. ஆறுமாதம் உழைத்து சம்பாதித்து ஆறு மாதம் ஊர் ஊராக சுற்றுலா சுற்றித் திரியும் ஒரு ஜெர்மன் காரர் என் கண் முன் வருகிறார். அவர்கள் தான் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள்.

நீங்கள் சொல்வது போல் மனமாற்றம் வருவது ரொம்ப கஷ்டம் தான். கையில் ஆறு லட்ஷம் இருந்தால் i10 தான் வாங்குவீர்கள், ஆறு nano வா வாங்குவீர்கள்..? பல பேர்களுக்கு இது கஷ்டம். ஆனால் கையில் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பழக்கத்தை அதிகரிக்கலாம். அது முதலில் நமது கையைக் கடிக்கக் கூடாது.. பின்னர் அதில் வரும் சந்தோஷம் நம்மை அதிகம் செய்யத் தூண்டும். நம் சக்திக்கு அளவாக உதவிகள் செய்து மன நிறைவோடு செய்து, நமது சுவடுகளைப் பதித்து விட்டுப் போகலாம்..

நன்றி... எங்களை எல்லாம் இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததற்கு..

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

// அரசு நினைத்தால் எந்த ஒரு பொருளையும் குறைந்த விலைக்குக் கொண்டு வர முடியும்.இதனால் பலன் அத்துனை கோடி மக்களுக்கும் சென்றடையும்.(அது தான் அரசின் கடமையும் கூட). //
Unmai prakash...
//

வாங்க இளங்கோ.. நமது அரசாங்க அமைப்பு அப்படி மாறி விட்டது.. எப்போது மாறும்..?

ILLUMINATI said...

நண்பா!நல்ல பதிவு.உங்களுக்கு பிடிச்சதை நீங்க எழுதுங்க.அப்ப தான் உங்களோட தனியான நடை அதில் வரும்.அடுதவங்களுக்காக எழுத வேணாம்.இது என்னோட கோரிக்கை.
அப்புறம்,பதிவு வழக்கம் போல நல்லா இருந்தது.
ஆனா,நாம நமக்குத் தேவையான விஷயத்தை தேடி ஓடுறதை விட தேவையில்லாத விஷயத்தைத் தேடி தான் அதிகம் ஓடுறோம்.

சாமக்கோடங்கி said...

இல்ல நண்பா.. எனக்கே கொஞ்சம் மாற்றம் வேணும்னு தோணுது.. ஆனா நீங்க சொல்லுறது ஒரு விதத்துல சரிதான்.. பிறக்கும்போதே தேடுதலும் தொடங்கி விடுகிறது.. எதைக் கண்டாலும் தேடுறோம் ஒடுறோம்.... அனா இலக்கு எத்துனை பேர் கிட்ட இருக்குன்னு தெரியல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு அண்ணா
வாழ்த்துக்கள்...

Post a Comment