மேட்டுப்பாளையம் காரமடை ரயில்வே கேட் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ஒரு கேட். காலையில் மற்றும் மாலையில் வாகன நெரிசல் ஏற்படும் நேரங்களில் சரியாக கேட் போடப்பட்டு அனைவருக்கும் தொந்தரவு தரும் இடம்.கேட் போடப்பட்டால் லாரிகள் எல்லாம் ஓரமாக நிற்க,தனியார் பேருந்துகள்(ரோட்டின் ஏக போக உரிமையாளர்கள்) மற்றும் இரு சக்கர வாகனங்கள் வலது புற இடைவெளி தங்களுக்கே விடப்பட்டதாக நினைத்துக் கொண்டு முன்னே போய் கேட்டை முட்டிக் கொண்டு நிற்பர்.கேட் திறந்து விட்டால் தான் இருக்கு களேபரமே.. ஒழுக்கமாக இடது புறத்தைப் பின்பற்றி நின்றால் இரண்டு நிமிடங்களில் கேட்டை கடந்து செல்லலாம் ஆனால் இவர்கள் அவசரப் பட்டு குறுகிய இடைவெளியில் இரண்டு பெரிய வாகனங்களை நுழைத்து விட்டு வண்டியை அனைத்து விட்டு நீ எடு நீ எடு என்று முட்டிக் கொண்டு நிற்பார்கள்.. நம் மக்களின் மனோ நிலையை ஆராயும்போது யாருக்கும் இங்கே பொறுமை இல்லை என்று முடிவுக்கு வரலாம் தானே...?
அன்று ஒரு காலை என் இருசக்கர வாகனத்துடன் கேட்டை நெருங்குகையில் சரியாக கேட் போடப்பட்டது.ஒரே நிமிடத்தில் எனக்குப் பின்னாலும் கேட்டுக்கு அப்பாலும் சரியான கூட்டம் சேர்ந்து விட்டது. (வழக்கம்போல் வலது பக்கம் வழிவிடாமல் நிறைய வண்டிகள் சேர்ந்து விட்டன. நொந்து கொண்டேன்.)கேட்டுக்கு அப்பால் ஒரு அம்பாசடர் முழுக்க ஆட்களை நிரப்பி நின்று கொண்டிருந்தது. வண்டிக்கு உள்ளே அனைவரும் சற்று கவலையுடன் காணப் பட்டனர்.அந்த வண்டி ட்ரைவர்,அருகில் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர் ஒருவரை அழைத்து ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து கேட்டின் இப்புறமிருந்த எங்களைப் பார்த்து சத்தமான குரலில் பேசினார். வண்டியில் இருப்பவர்களின் உறவுக்காரர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் இருப்பதாகவும் மிகவும் அவசரம், வண்டிகள் கொஞ்சம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
ரயில் வந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்...!!! ஒரு முப்பது வினாடிகளில் வலது புறம் நின்று கொண்டிருந்த வண்டிக்காரகள் அனைவரும் பின்னாலேயே சென்று கிடைத்த இடப்புற சந்துகளில் சொருகி நின்று கொண்டனர். புதிதாக எதுவும் தெரியாமல் வலது புறம் காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது என்ற மதப்பில் முறுக்கிக் கொண்டு வந்த வாகனங்கள் அனைத்தையும் நின்று கொண்டிருந்த அனைவரும் ஒரே குரலில் மிரட்ட, அவர்கள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டனர். ரயில் போனதும் கேட்டைத் தூக்க முடியவில்லை. அதில் ஏதோ ஒரு இயந்திரக் கோளாறு. கேட் கண்காணிப்பாளர் என்ன செய்வதென்று திகைப்பில் நிற்க நின்று கொண்டிருந்த மக்கள் தாங்கள் செல்வதைப் பற்றிக் கூடக் கவலைப்பட வில்லை, அந்த அம்பாசடர் வண்டி எப்படியாவது முதலில் செல்ல வேண்டும் என்று ஒருமித்து யோசித்தனர். இரண்டு மூன்று பேர் உடனடியாக இறங்கி கேட்டைத் தூக்கப் பிடித்தனர். அந்த வண்டி தாண்டியதும் நமது ஆட்கள் பழையபடி முட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஆக சில நேரங்களில் மனிதனின் மனமூடி கழன்று மனிதநேயம் எட்டிப் பார்க்கிறது.பத்துப் பதினைந்து நிமிடங்கலானாலும் ஒதுக்க முடியாத அந்த நெரிசல் முப்பதுக்கும் குறைவான நொடிகளில் ஒதுக்கப்பட்டது எப்படி..? மக்கள் ஒருமித்துச் செயல்படும்போது அதன் சத்தி அபாரமானது அல்லவா..?
இன்று ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாமல் முறுக்கிக் கொண்டு சென்ற ஒரு தனியார் பேருந்தைப் பார்த்து மறுபடியும் மனதில் இதே கேள்வி எழுந்தது. இளங்கோ ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பின்னால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம். இதே போலத்தான் ஒரு அவசர ஊர்திக்கு வழிவிடுவதும். ஏன் அந்த தீயணைப்பு வண்டி உங்கள் வீட்டில் விழுந்த தீயை அணைக்கக் கூட சென்று கொண்டிருக்கலாம். அந்த அவசர ஊர்தியில் உங்கள் உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். யார் கண்டார்...?
மனிதன் அவசர கதியில் உழைப்பதும் அவனும் அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லவா..? அதை இன்னொருவன் குடியைக் கெடுத்துப் பெறலாமா..? ஆகவே மனித நேயம் வெளிப்பட வேண்டிய இடங்களில் மனமூடிகளை கழற்றி எறிவோம்...
----------------------------------------------------------------
இருங்கப்பா.. இன்னும் முடியல.. நானாவது சின்ன பதிவு போடறதாவது..
இன்னொரு மனமூடியைப் பற்றியும் இப்போதே தெரிந்து கொள்ளலாம். இன்றைய கூட்ட நெரிசலில் நடத்துனரின் பாடு அதோ கதி தான். அவர் கத்துவதற்கு ஏற்றாற்போல் தான் நமது மக்களும்.காலையில் வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும்வரை படியில் நிக்காதே உள்ளே வாங்க, சில்லறையை கையிலேயே வைங்க, வழிவிட்டு நில்லுங்க, டிக்கட்ட கேட்டு வாங்குங்க.. அப்படி இப்படின்னு கத்திகிட்டே இருக்க வேண்டிய நிலைமை. அவர் சுடுதண்ணி கொட்டினது மாதிரி கத்துறது இல்லாம பேருந்தில் பயனிப்பவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.
ஒரு முறை ஒரு அரசுப் பேருந்தில் ஏறும்போது நடத்துனர், "உள்ளே வர்ற தம்பி, தங்கக் கம்பி.. வழிவிடுங்க ராசாக்களா..." என்று ஏற்ற இறக்கமான குரலில் அழகாகப் பேசினார். எனக்கும் சிரிப்பு சுற்றி இருந்தவர்களுக்கும் சிரிப்பு.."பெரியம்மா உங்க ஸ்டாப்பு வந்துருச்சு.. பாத்து இறங்குங்க தாயி.. அப்பா மக்கா அம்மாவ கொஞ்சம் இறக்கி விடுங்க.. யப்பா டிரைவரு, விசிலடிக்கற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா...", "சில்லறை இல்லையின்னா கவலைய விடுப்பா.. அதுக்குதான நானிருக்கேன்.. இந்தா பிடி டிக்கட்டு, இந்தா காச வெச்சு சந்தோஷமா இரு ரை ரைட்..." இப்படி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். அவரின் கோமாளித்தனமான(?!!?!)செய்கை அனைவரையும் கவர்ந்தது.. நெரிசலையும் மறந்து சந்தோஷமாகப் பயணித்தோம். நாலு பேர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் கோமாளியாக இருப்பதில் தவறில்லை தானே..இவர் கொஞ்சம் வித்தியாசமான நடத்துனர் தான்.அவருக்கும் ரத்தக்கொதிப்பு ஏறாது. இன்னொரு அதிசயம்(!?!) அந்தப் பேருந்தின் படிகளில் நின்று ஒருவர் கூட பயணிக்கவில்லை.!!
ஆக எவ்விதத் தருணத்தையும் சந்தோஷமாக மாற்றும் வித்தை அவரவர்கள் கையிலேயே உள்ளது. கொஞ்சம் நமது மனமூடிகளைக் கழற்றி வைத்தால் போதும்.
நன்றி..
| பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி |













