இன்று வீட்டு வேலை காரணமாக அலுவலகத்திலிருந்து கொஞ்சம் நேரமாக வர வேண்டிய சூழ்நிலை. வண்டியை வீட்டுக்கு விரட்டினேன்.. வீரபாண்டிப் பிரிவைத் தாண்டும் போது நாலரை மணி இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் பள்ளிக் குழந்தைகள் கூட்டம். எல்லோரும் நகரப் பேருந்துக்காக காத்திருந்தனர். சைக்கிளைப் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அலசிக்கொண்டே பள்ளிச் சிறுவர்கள் ஓட்டிக் கொண்டு இருந்ததால் கொஞ்சம் பதனமாகவே எனது வண்டியை ஓட்டினேன்.
சிறிது தொலைவில் இரண்டு பிஞ்சுக் கைகள் "லிப்ட்" கேட்டு வண்டியை நிறுத்தின. என்ன அவசரமாக இருந்தாலும் பொதுவாக சும்மா தானே போகிறோம் என்று ஏற்றிக் கொள்வது வழக்கம்.
"அண்ணா அண்ணா சாந்தி மேடு போகணும்"..
ஏறுப்பா.. டே டே ஒருத்தனுக்குத்தாண்டா எடமிருக்கு....
அண்ணா ரெண்டு பேரும் ஏறிக்கறோமே....???
(நண்பர்களை ஏன் பிரிப்பானேன்) ஏறுங்கப்பா...
ஏறியாச்சா... என்னங்கடா உங்கள விட உங்க பேக் எல்லாம் வெய்ட்டா இருக்கே...
சைடுல கெட்டியா பிடிச்சிட்டு உக்காருங்க போலாமா ...
புடிச்சாச்சு போகலாங்கண்ணா....
உங்க பேரென்னங்ண்ணா...?
பிரகாசு...யாருப்பா அது ரெண்டு தோளிலையும் கை போட்டு இருக்கறது..? நான் எப்படி வண்டி ஓட்ட..??
அண்ணா நான் சரியாத்தான் உக்காந்து இருக்கேன் இவன் தான்.. டேய், பின்னாடி இருக்குற கம்பிய புடிச்சுக்கடா.. அண்ணா வண்டி ஓட்டட்டும்..
வழி நெடுக சிறு பிள்ளைகள் தோளில் சில மலைகளைச் சுமந்து கொண்டு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தனர்..பாவம்.. ரெண்டு பேரை நான் கூட்டிக் கொண்டேன்.. மற்றவர்களை...
ஏம்ப்பா, வண்டி ஒண்ணும் வரலையா..?
ஆமாங்கண்ணா... ரொம்ப நேரமா நிக்கறோம் பஸ் வரவே இல்லைங்கண்ணா.. டியூஷனுக்கு நேரம் ஆச்சுங்கண்ணா...
எப்போதும் இந்த நேரம் இப்படித்தான் இருக்குமா...???
முக்கால் வாசி நாள் இப்படித்தாங்கண்ணா...
இங்கதாண்ணா.. எறங்கிக்கறோம்... டேங்க்சுங்ண்ணா...
சரிப்பா பாத்துப் போங்க.... டாடா காட்டிக் கொண்டே ஓடினர்..
கியரைப் போட முயல, அங்கிருந்து வேறு இரண்டு சிறுவர்கள் வந்தனர்.. அண்ணா பெட்ரோல் பங்கு போகணும்..
(அடப்பாவமே..)ஆட்டாம ஏறுங்கப்பா...
ஏம்ப்பா எப்பவுமே இப்படித்தானா..??
ஆமாங்கண்ணா.. யாராவது லிப்ட் குடுப்பாங்க...
எந்த ஸ்கூல்ப்பா நீங்க எல்லாம்...??
நாங்க தம்புங்கண்ணா..
ஆமா நான் எறக்கி விட்டனே.. அவுங்க ரெண்டு பெரும் எந்த ஸ்கூலுன்னு தெரியுமா..??
அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...
ஒரு நகரப் பேருந்து எதிரில் வர உள்ளே மூன்று வண்டிக்கான கூட்டம்.. வண்டியே ஒரு பக்கம் சாய்ந்து இருந்தது.. வெளியில் நான்கு வண்டிக்கான கூட்டம்.. அத்தனையும் சின்னப் பிஞ்சுகள்.. மேலே இருக்கும் கம்பி யாருக்கும் எட்டாது.. எப்படி உள்ளே நசுங்கி நிற்கப் போகிறார்களோ..?? இதில் முதுகில் மூட்டை வேறு..

ஆ அந்த மரத்துகிட்ட நிறுத்துங்கண்ணா...
பாத்துப் போங்கப்பா...
வழி நெடுக ஒரே சிந்தனை...
நானாக இருந்ததால் இறக்கி விட்டேன்.. இதுவே யாராவது கடத்தும் எண்ணத்துடன் வந்திருந்தால்...? பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொல்லித்தான் அரசுக்குத் தெரியுமா..? இரவு நேரமாகி விட்டால் இலவசப் பயண அட்டை செல்லாதோ என்னவோ பேருந்துக்குள் நசுங்கியாவது சென்று விட வேண்டுமென்று துடிக்கும் அந்தப் பிசுகளைப் பற்றி அரசுக்கு என்ன கவலை..? விடப்படும் கொஞ்ச நஞ்ச வண்டிகளாவது தரமாக உள்ளனவா..? தினமும் ஓரிரண்டு பேருந்துகள் பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிற்பதைக் காண்கிறேன். இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் உத்திரவாதம்.
கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாடகை ஆட்டோ வைக்கிறார்கள்.. வாடகைக் கார் (?!?) வைக்கிறார்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு என்ன வழி..?
ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??
நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. இரண்டு பேருந்துகள் அதிகமாக விட என்ன ஒபாமாவிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டுமா..??(ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது).
இனி கடத்த வேன் எல்லாம் தேவை இல்லை.. பைக் போதும். அரசு ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்.. எவன் வேண்டுமானாலும் எந்தக் குழந்தையை வேண்டுமானாலும் கடத்திக் கொன்று குட்டைகளில் வீசிச் செல்வார்கள்.
(ஆள்பவர்களின் பசங்க எல்லாம் கூலா கான்வென்ட்ல படிச்சிக்கிட்டு இருப்பாங்க)
சாமக்கோடங்கி |