Saturday, March 19, 2011

கொதி நிலை - பாகம் 4

கடந்த பாகங்களில் மற்ற நாடுகள் பற்றியும், நம் நாட்டின் அவல நிலை பற்றியும் பார்த்தோம். நமது நாடு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக செல்லரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மேலும் பார்ப்போம்.

எந்த ஒரு அரசாங்கமும் தங்கள் நாட்டின் மீதும், குடிமக்களின் மீதும் முழுக்கட்டுப் பாட்டைக் கொண்டிருக்காதவரையில் அந்த நாட்டின் வளர்ச்சி கேள்விக்குரியதே..

பத்து பதினைந்து வருடத்திற்கு முன்னமே நமது நாட்டின் ஜனத்தொகை இவ்வளவு கோடியை எட்டும் என்று அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குத் தெரிந்திருக்காதா..?? இவ்வளவு மக்கள் பெருகினால், அவர்களுக்கு மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவை அதிகரிக்கும், அதை முன்வைத்து தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டா விட்டால், பற்றாக் குறை ஏற்படும் என்று தெரியாதா..? தீட்டினார்கள்.. நாட்டுக்கு அல்ல, அவரவர்களுக்கு.. இன்று பல அம்பானிகளும், டாட்டாக்களும், மாறன்களும், மிட்டல்களும் மிகப் பெரும் 'தனி நபர்' கோடீஸ்வரர்களாகவும், அதன் மூலம் கிடைக்கும் லஞ்சப் பணத்தில் தாங்கள் குளிர் காயவும் திட்டம் தீட்டினார்கள்.. புள்ளி விவரங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டனர்.. எதிர்காலம் கேள்விக் குறி.. இதுல என்னடான்னா, இந்தியாவில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று தம்பட்டம் வேறு.. வெளங்கிடும்...

இதோ இன்றைய நிலைமை.. எங்கு பார்த்தாலும் பரவலாக குறைந்து மூன்று மணி நேரம் "அறிவிக்கப் பட்ட" மின்வெட்டு, கிராமப் புறங்களில் இந்த மின்வெட்டு ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அதனால் இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது..?? ஆம் என்று நாம் சொன்னாலும் குளிர்விக்கப் பட்ட பளிங்கு பங்களாக்களில் வசிக்கும் நமது தலைவர்களுக்கு அது தெரியப் போவது இல்லை.

யாராவது ஒரு தலைவர், 2020ல் நமது நாட்டுக்கு இவ்வளவு தேவை, நாம் இவ்வளவு பின் தங்கி இருக்கிறோம், இதனை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களா..??(கலாம் அவர்களை தவிர்த்து..)

இங்கே ஜெர்மனியில் பாருங்கள்..

ஃபுகுஷிமாவில் ஏற்பட்டிருக்கும் அணு உலை விபத்தை அடுத்து தங்களின் அணு உலைகளை உடனடியாக, அவசரமாகப் பரிசீலனை செய்துள்ளது. மறுமலர்ச்சி செய்யப் பட இருந்த கொஞ்சம் பழைய அணு உலையை மூட ஆணைகள் உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களின் அணு உலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனப்படும் பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகி விட்டன. அணு உலைகளைத் தவிர்த்து எதிர்காலத்தில் கிரீன் எனேர்ஜி எனப்படும் சுற்றுப் புறச் சூழலை மாசு படுத்தாத ஆற்றல் உற்பத்தியை பெருக்க முனைப்போடு செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது..


நமது நாட்டில்..?? புதிதாக மட்டுமே பல இடங்களில் கிட்டத்தட்ட 30000 MW மின் உற்பத்தி அணு மின் உலைகள் கட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.. அணு உலைகள் என்றாலே ஆபத்து என்று சொல்லவில்லை.. ஆனால் தற்போது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் அணு உலைகளால், நமது நாட்டின் பாதி மின்தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற பட்சத்தில், இவ்வளவு கோடிகளைக் கொட்டி அணு உலைகளே தான் வேண்டும் என்று அரசு ஒற்றைக் காலில் நிற்பதில் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போய்ச் சேரும் வருமானம் மற்றும் அதில் இந்தியாவில் இருக்கும் அரசியல் தரகர்களுக்குக் கிடைக்கும் "லம்ப் அமௌன்ட்" இதையெல்லாம் நாமே சராசரியாக ஊகித்து விடலாம். ஆம் நண்பர்களே.. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்யும் ஒருத்தர் கூட அரசியல் பெருச்சாளிகளைத் திருப்திப் படுத்தாமல், 'ஒரு பிடி மண்ணைக் கூட தாய் நாட்டில் இருந்து கொண்டு போக முடியாது'.

எனது நெருங்கிய நண்பர் கூறுகிறார், அவரது கிராமத்தில் தினமும் அதிக மின்வெட்டு இருந்த வேளையில் கூட மின் திருட்டு வெளிப்படையாகவே நடந்ததாம். நமது ஏ வா வேலு (திமுக)வுக்குச் சொந்தமான ஒரு ஆலையில் தான் இந்த மின்திருட்டு நடந்ததாம். எனது நண்பர் இதனைத் தெரிந்து கொண்டு, சில ஊர் இளைஞர்களுடன் காவல் நிலையத்தில் தகுந்த சாட்சியத்தோடு புகார் அளித்ததோடு அல்லாமல், கூடவே சென்று ஆலைக்கு சீல் வைத்து விட்டுத் திரும்பி இருக்கின்றனர்.அப்புறம் என்ன நடந்தது..? தெரிந்த கதை தானே..?? இரண்டே நாளில் பூட்டப் பட்ட கதவுகள் திறக்கப் பட்டு, மறுபடியும் அதே வேலை பழைய வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவசர அவசரமாக நாட்டின்(?!?!) நிலை கருதி, இந்த பூட்டு திறக்கும் ஆணையைப் பிறப்பித்தவர், மாண்புமிகு மின்வெட்டு வீராசாமி என்று சொல்கிறார் நண்பர். நாடே சுடுகாடாய் மாறினாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.. எவனாவது "இந்தியா ஒளிர்கிறது"ன்னு சொன்னா, மக்கா வாயிலேயே அடிக்கத் தோணுது.. எங்க ஒளிர உடுராணுக... இருக்கறதே ஒரே குண்டு பல்பு.. அதோட டங்ஸ்டனில் எட்டுகாலி கூடு கட்டுகிறது... அவ்வளவு நம்பிக்கை நமது மின்வாரியத்தின் மீது..!!!!

கடந்த இருபது வருடங்களில் மின்சார உற்பத்தி எவ்வளவு பெருக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தால் புரியும்.. நமது பாராளுமன்றத்தில் வழுக்குமண்டைகள் உக்காந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று..

இந்தியாவின் தற்பொழுதைய மின்தேவைக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை அணு உலைகள் அல்ல. தெரியுமா உங்களுக்கு..? நாட்டில் தயாரிக்கப் படும் மின்சாரத்தில் 35%ற்கும் மேலான மின்சாரம் தொலைக் கம்பிகளின் மூலம் இழக்கப் படுகிறது. அதாவது மின்சார உற்பத்தி செய்யப் படும் இடம் ஒரு எல்லையில், பயனாளி மற்றொரு எல்லையில். இதனைக் கடத்தப் பயன்படும் கம்பிகளின் கசிவுகளினால் ஏற்படும் மின்னிழப்பு, மற்றும் ஸ்டெப்-அப், மற்றும் ஸ்டெப் டவுன் எனப்படும் மின்னழுத்த மாற்ற முறைகளின் போது ஏற்படும் மின்னிழப்பு இவை எல்லாம் சேர்த்தால், அது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் பாதியைக் குடித்து விடுகிறது. யாருக்கும் பயன்படாமல் காற்றில் கலக்கப் பட்டு விடுகிறது நண்பர்களே..

இதற்குத் தீர்வு Decentralisation எனப்படும் மையப் படுத்தப் படாத மின் தயாரிப்பு முறைகள். அதாவது ஒரு பகுதிக்குத் தேவையான மின்சாரத்தை அந்தப் பகுதியிலேயே தயாரிப்பது. இது சாத்தியமே.. நான் சோலார் துறையில் இருப்பதால் இதை என்னால் புள்ளி விவரங்களுடன் சொல்ல இயலும். என்ன கெரகமோ அந்தத் துறையிலும் நமது அரசியல் ஊதாரிகள் கைவைக்க ஆரம்பித்தாயிற்று.

சரி நண்பர்களே நமது நாட்டில் இந்தத் துறைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

நமது நாட்டின் பிரச்சினைகளை முதலில் விளக்கிப் பிறகு ஒவ்வொன்றாக எப்படிச் சரி செய்யலாம் என்று எழுதலாம் என்று நினைத்தால், பிரச்சினைகளே இன்னும் நிறைய பதிவுகள் போகும் போல..

பின்குறிப்பு: இந்தியாவில் 2020ற்குள் 20000MW மின்னுற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் சொல்கையில், ஜெர்மன் நண்பர்கள் சொன்ன பதில், இங்கே உள்ள பல நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனம் மட்டுமே கடந்த ஒரே வருடத்தில் 7 GW மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களைக் கட்டிக் கொடுத்து உள்ளனர். ஒரே வருடம் நண்பர்களே.. மறுபடியும் சொல்கிறேன் ஜெர்மனி தமிழ்நாட்டைப் போல இரண்டரை மடங்கு தான். எல்லாம் ஆட்சித் திறன் தான் காரணம்.. ஆட்சித் திறனா..?? அப்டீன்னா..??

சாமக்கோடங்கி

3 பின்னூட்டம்:

பொன் மாலை பொழுது said...

தொடருங்கள்.

மதுரை சரவணன் said...

super..vaalththukkal

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆட்சித் திறனா..?? அப்டீன்னா..??
//

மில்லியன் டாலர் கேள்வி...

பதிவு அருமை..

Post a Comment